நேர்மையான போலீஸ் அதிகாரி சரத்குமார், சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்க ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். சென்ற இடத்தில் ஸ்ரீஷாவை சந்திக்கிறார். காதல் கொண்டு, அவரை திருமணம் செய்கிறார். வில்லனை பிடிக்க சரத் முயற்சிக்கும்போது ஸ்ரீஷா வின் தந்தை இறக்கிறார். தந்தை சாவுக்கு காரணமான சரத்தை ஸ்ரீஷா வெறுக்கிறார். இந்தியா திரும்புகிறார் சரத்.
ஸ்ரீஷா நினைவாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் சரத்துக்கு 21 வருடத்துக்கு பிறகு மனைவி இறந்த செய்தி கிடைக்கிறது. ஸ்ரீஷாவின் கடைசி ஆசைப்படி அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய அங்கு செல்கிறார் சரத். தனக்கு மகள் இருப்பதை அறிகிறார். மகள் ஸ்ரேயாவை அதே போதை கடத்தல் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை வருகிறது. தந்தையை வெறுக்கும் ஸ்ரேயாவிடம், தான் யார் என்பதை மறைக்கிறார் சரத். ஸ்ரேயாவை அவர் எப்படி காப்பாற்றினார் என்பது மீதிக் கதை.
மனைவி மீது வைத்திருக்கும் அன்பு, மகள் தன்னை வெறுத்தபோதும் அதை தாங்கிக்கொண்டு அவள் மீது பாசம் கொள்ளும் ஏக்கம் என்று நடிப்பில் சரத் மின்னுகிறார். சட்டை கசங்காமலேயே எதிரிகளை கையாளும் அந்த ஜேம்ஸ்பாண்ட் ஆக்ஷன் ரசிக்கலாம். ஜோடி இல்லாவிட்டாலும் தனிப் பாடல்களில் கிளாமர் காட்டி ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார் ஸ்ரேயா. வெகுளித்தனமான பேச்சும், குறும்பும் அழகு, தந்தை யார் என்பதை ஆபத்து நேரத்தில் உணர்ந்து, பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறபோது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் கவுண்டமணியிடம் அதே நக்கல்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச். புதுமுகம் ரஃபியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணியில் சோபிக்கவில்லை. வழக்கமாக நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு ஜுகல்பந்தி நடத்தும் இயக்குனர் ரவிக்குமார், இதில் மூன்றுபேரை மட்டும் வைத்து கதையை நகர்த்த சிரமப்படுகிறார். படத்தில் ஆஸ்திரேலிய மக்களும் போலீசும் நகரில் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்கிறார்கள். ஆக்ஷன் படம் என்றால் லாஜிக் இருக்கக் கூடாதா?
No comments:
Post a Comment